"நீசம்" என்றால் வலுவிழந்த நிலை. "பங்கம்" என்றால் பாதிப்படைந்த நிலை. நீசம்+பங்கம் (நீசபங்கம்) என்பது நீசம் அடைந்த கோளின் நிலைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என பொருள் கொள்ள வேண்டும்.
நீசம் அடைந்த நிலையில் ஒரு கோள் இருந்தால், அதனால் எந்தப் பயனும் தர இயலாது என்பது ஆருடம் கணிப்பதில் ஒரு விதி. அப்படியானால், நீசபங்கம் ஏற்பட்ட ஒரு கோளினால் எப்படி ராஜயோகம் தர இயலும்?
கீழ்காணும் நடைமுறையில் ஒரு கோள் நீசபங்கம் அடைந்து இருக்குமேயானால் அதனால் ராஜயோகம் ஏற்படும். அதாவது, கோள்கள் தங்களுடைய நீச ராசியில் நீச்சம் அடைந்தாலும், அந்த ராசியின் உரிமையாளர், ஆட்சியோ உச்சமோ பெற்று லக்னத்திற்கோ அல்லது ராசிக்கோ 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் இருந்தால் இந்த நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது.
இதை தவிர இன்னும் சில வழிகளிலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படும் என பழமையான ஆருட நூல்கள் விளக்கிக் கூறுகின்றன.
அதன்படி, ஒரு நீசம் பெற்ற கோள் உச்சம் பெற்ற கோளுடன் சேர்ந்திருந்தாலும் இந்த யோகம் ஏற்படும்.
நீசமடைந்த கோள் லக்னத்திற்கோ அல்லது நிலவிற்கோ 1, 4, 7, 10-ல் இருந்தாலும் பயன் கிடைக்கும்.
நீசமடைந்த கோள் இருக்கும் வீட்டின் உரிமையாளர் பரிவர்த்தனைப் பெற்றாலும் , நீசமடைந்த கோள் மற்றொருவர் நீசமடைந்த கோளை பார்த்தாலும், நீசமடைந்த கோள் வக்கிர நிலையை அடைந்தாலும், என இவற்றில் ஏதேனும் ஒன்று ஏற்பட்டாலும் நீசபங்க ராஜயோகம் ஏற்படுகிறது என்கின்றனர்.
இப்படி, ஏதாவது ஒரு ஆருட விதியின் கீழ் இந்த யோகத்தைப் பெற்றிருந்தாலும், இந்த யோகமானது, அந்த கோளின் தசாபுக்தி நடக்கும் ஊழியில் மட்டுமே பலனைத் தரும்.
ஆருட கணிப்புகளின் படி, ஒரு நீசம் அடைந்த கோளினால் 10 விழுக்காடு வரை தான் தனது நல்ல பலன்களை சாதகருக்கு கொடுக்க இயலும்.
அதே வேளையில், அந்த நீச நிலைக்கு பங்கம் ஏற்பட்டால், அந்தக் கோள் 120 விழுக்காடு அளவிற்கு வலிமை பெறுகிறது என்கிறது ஆருட நூல்கள்.
இது அந்த உயர்ந்த அளவான 100 விழுக்காடு அளவை காட்டிலும் கூடுதலாக 20 விழுக்காடு இருப்பதால், ராஜயோகம் ஆக விளங்குகிறது.
இந்த யோகம் கொண்டவர்கள், திடீர் பணவரவு பெற்று , அதாவது அந்தக் கோளின் தசாபுத்தி நேரத்தில் பெரும் செல்வம் ஈட்டி பெயரும் புகழும் கிடைக்க வாழ்வார்கள்.