இந்திய சோதிடம் என்பது 27 விண்மீன்கள், பனிரெண்டு ராசிகள், ஒன்பது கோள்கள் ஆகியவற்றின் செயல்களை மற்றும் இருப்பிடங்களை வைத்து கணிக்கப்படும் பலன்கள் கொண்டதாகும்.
சோதிடத்தில் ஒன்பது கோள்கள்:
சோதிடத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் இடம்பெற்றுள்ளன. அவை ஞாயிறு, நிலவு, செவ்வாய், அறிவன் (புத), வியாழன், வெள்ளி, காரி (சனி), ராகு மற்றும் கேது.
அறிவியல் கூற்றுப்படி ஞாயிறு மற்றும் நிலவு கோள்களாக கருதப்படுவதில்லை என்றாலும், இந்திய சோதிட முறைப்படி கணிப்பதற்கு அவை கோள்களாக கருதப்படுகின்றன. முதலில், 7 கோள்கள் மட்டுமே சோதிடத்தில் இருந்துவந்த நிலையில், பின் நாட்களில் ராகு மற்றும் கேது என, அறிவியலில் இல்லாத 2 நிழல் கோள்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
இந்த ஒன்பது கோள்களும் மூன்று பாலினமாக பிரிக்கப்படுகிறது.
ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை ஆண் என்றும்,
நிலவு, வெள்ளி ஆகியவை பெண் என்றும்,
அறிவன், காரி மற்றும் இராகு, கேது ஆகியவை மூன்றாம் பாலினம் என்றும் பிரிக்கப்படுகின்றன.
இந்த கோள்கள் ஒவ்வொன்றும் தனக்கென உரித்தானதாக ராசிகளை வீடுகளாக அமைத்து கொண்டுள்ளதாக இந்திய ஜோதிடம் கணிக்கிறது. அவை முறையே
செவ்வாய் கோளுக்கு மேஷம் மற்றும் விருச்சிகம் ராசிகள்,
வெள்ளி கோளுக்கு ரிஷபம் மற்றும் துலாம் ராசிகள் ,
அறிவன் கோளுக்கு மிதுனம் மற்றும் கன்னி ராசிகள் ,
நிலவு கோளுக்கு கடகம் ராசி,
ஞாயிறு கோளுக்கு சிம்மம் ராசி,
வியாழன் கோளுக்கு தனுசு மற்றும் மீனம் ராசிகள்,
காரி கோளுக்கு மகரம் மற்றும் கும்பம் ராசிகள்.
கோள்களின் பயணம்
கோள்களின் இருப்பிடம் அவற்றின் சுழற்சிக்கு ஏற்ப ஒவ்வொரு இராசி கட்டமாக மாறி மாறி அமையும். அவை தமக்கு உரித்தான வீடுகளை விட்டு பிற ராசி கட்டங்களிலும் பயணிக்கும்.
அப்படி பயணிக்கும் பொழுது அவை இருக்கும் இடத்தை பொறுத்து ஆட்சி உச்சம் நட்பு நீச்சம் பகை என ஐந்து நிலைகளில் ஏதாவது ஒரு தன்மையை ஒவ்வொரு ராசிக்கும் வெளிப்படுத்தும்.
கோள்கள் பயணிக்கும் திசை:
ஞாயிறு நிலவு செவ்வாய் வியாழன் அறிவன் காரி வெள்ளி ஆகிய ஏழு கோள்களும் இடமிருந்து வலமாக தம் பயணத்தை கொண்டிருக்கும்.
ராகு மற்றும் கேது ஆகியவை வலமிருந்து இடமாக தம் பயணத்தை கொண்டிருக்கும்.
கோள்கள் பயணிக்கும் ஊழி அளவு
ஞாயிறு ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் அளவிற்கு பயணிக்கும்.
நிலவு ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை நாட்கள் மட்டுமே பயணிக்கும். செவ்வாய் ஒன்றரை திங்கள் பயணிக்கும்.
அறிவன் ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் பயணிக்கும்.
வியாழன் சுமார் ஓராண்டு பயணிக்கும். சில ஆண்டுகளில் வியாழன் தம் இருப்பிடத்தை இரண்டு அல்லது மூன்று முறை மாற்றி அமைக்கும்.
காரி ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் பயணிக்கும்.
ராகு மற்றும் கேது ஆகிய கோள்கள் ஒன்றரை ஆண்டுகள் பயணிக்கும்.
வெள்ளி ஒவ்வொரு ராசியிலும் ஒரு திங்கள் அளவிற்கு பயணிக்கும்.
கோள்களின் நட்பு வீடுகள்
ஞாயிறு - விருச்சிகம் தனுசு கடகம் மீனம் ஆகியவை நட்பு வீடுகள்.
நிலவு - மிதுனம் சிம்மம் கன்னி ஆகியவை நட்பு வீடுகள்.
செவ்வாய் - சிம்மம் தனுசு மீனம் ஆகியவை நட்பு வீடுகள்.
அறிவன் - ரிஷபம் சிம்மம் துலாம் ஆகியவை நட்பு வீடுகள்.
வியாழன் - மேஷம் சிம்மம் கன்னி விருச்சிகம் ஆகியவை நட்பு வீடுகள்.
வெள்ளி - மிதுனம் தனுசு மகரம் கும்பம் ஆகியவை நட்பு வீடுகள்.
காரி - ரிஷபம் மிதுனம் ஆகியவை நட்பு வீடுகள்.
ராகு மற்றும் கேது - மிதுனம் கன்னி துலாம் தனுசு மகரம் மீனம் ஆகியவை நட்பு வீடுகள்.
கோள்களின் பகை வீடுகள்:
ஞாயிறு - ரிஷபம் மகரம் கும்பம் ஆகியவை பகை வீடுகள்.
செவ்வாய் - மிதுனம் கன்னி ஆகியவை பகை வீடுகள்.
அறிவன் - கடகம் விருச்சிகம் ஆகியவை பகை வீடுகள்.
வியாழன் - ரிஷபம் மிதுனம் துலாம் ஆகியவை பகை வீடுகள்.
வெள்ளி - கடகம் சிம்மம் தனுசு ஆகியவை பகை வீடுகள்.
காரி - கடகம் சிம்மம் விருச்சிகம் ஆகியவை பகை வீடுகள்.
ராகு மற்றும் கேது - கடகம் சிம்மம் ஆகியவை பகை வீடுகள்.
நிலவிற்கு மட்டும் ஒரு சிறப்பு உண்டு. அது எந்த ராசிக்கும் பகை கிடையாது. எல்லா ராசிக்கும் அது நட்பு பாராட்டும் கோள் ஆகும்.
கோள்களின் ஆட்சி, உச்சம், நீச்சம், மூலத்திரிகோண நிலை:
ஞாயிறு, சிம்மத்தில் ஆட்சி பெற்றும் மேஷத்தில் உச்சம் பெற்றும் துலாமில் நீச்சம் அடைந்து சிம்மத்தில் மூலதிரிகோணம் கொண்டும் இருக்கும்.
நிலவு, கடகத்தில் ஆட்சி பெற்றும் ரிஷபத்தில் உச்சம் விருச்சிகத்தில் நீச்சம் அடைந்து ரிஷபத்தில் மூலத்திரிகோண நிலைகொண்டிருக்கும்.
செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிகம் ஆட்சிபெற்று மகர ராசியில் உச்சம் பெற்று கடகத்தில் நீச்சம் அடைந்து மேஷத்தில் மூலதிரிகோணம் கொண்டிருக்கும்.
அறிவன், மிதுனம் மற்றும் கன்னியில் ஆட்சி பெற்று கன்னியில் உச்சம் பெற்று மீனத்தில் நீச்சம் அடைந்து கன்னியில் மூலத்திரிகோணம் பெற்றிருக்கும்.
வியாழன், தனுசு மற்றும் மீன பில் ஆட்சிபெற்று கடகத்தில் உச்சம் அடைந்து மகரத்தில் நீச்சம் அடைந்து தனுசு ராசியில் மூலதிரிகோணம் பெறும்.
வெள்ளி, ரிஷபம் மற்றும் துலாம் ஆகிய ராசிகளில் ஆட்சி பெற்று மீனத்தில் உச்சம் பெற்று கன்னியில் நீச்சம் அடைந்து துலாம் ராசியில் மூலதிரிகோணம் கொண்டிருக்கும்.
காரி, மகரம் மற்றும் கும்பத்தின் ஆட்சிபெற்று துலாம் ராசியில் உச்சம் அடைந்து மேஷத்தில் நீச்சமாகி கும்பத்தில் மூலதிரிகோணம் பெற்றிருக்கும்.
ராகு, கன்னியில் ஆட்சி அமைத்து ரிஷபத்தில் உச்சம் அடைந்து விருச்சிகத்தில் நீச்சம் அடைந்து ரிஷப ராசியில் மூலதிரிகோணம் பெற்றிருக்கும்.
கேது, மீனத்தில் ஆட்சி பெற்று விருச்சிகத்தில் உச்சம் அடைந்து ரிஷபத்தில் நீச்சம் அடைந்து விருச்சிகத்தில் மூலதிரிகோணம் கொண்டிருக்கும்.
பார்வை:
கோள்கள் ஒவ்வொரு ராசியில் இருக்கும் இடத்தைக் கொண்டு பலன்கள் கணிக்கப்படும் நிலையில், ஒவ்வொரு கோளும் தாம் இருக்கும் இடத்திலிருந்து 7வது ராசியைப் பார்க்கும் என இந்திய ஜோதிடம் கணிக்கிறது. அத்தகைய பார்வையால் அந்த ராசி கொண்டவர்களுக்கு பலன் ஏற்படும்.
செவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4 7 8 ஆகிய ராசிகளை பார்க்கும் தன்மை கொண்டது. இவற்றில் 4 மற்றும் 8-ம் ராசி பார்வை என்பது சிறப்பு பெற்றது.
வியாழன் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5 7 9 ஆகிய ராசிகளை பார்க்கும் இதில் 5 மற்றும் 9-ம் பார்வை என்பது சிறப்பு பெற்றது.
காரி தான் இருக்கும் இடத்திலிருந்து 3 7 10 ஆகிய ராசிகளை பார்க்கும். இதில் 3 மற்றும் 10-ம் பார்வை சிறப்பு பெற்றது.