ஆருடம் கணிக்க பயன்படும் 9 கோள்களில் 7 கோள்கள் தமக்கென உரிமையாக ராசி வீடுகளைக் கொண்டிருக்கும் என்பதை அறிந்தோம். தொடர்ந்து அவை எந்தெந்த ராசி வீடுகளில் இருந்தால் தன் உரிமை வீட்டில் இருப்பதை காட்டிலும் கூடுதலாக உயர் நிலைப் (உச்சம்) பெற்று, தனது திறனை 125% ஆக வெளிப்படுத்தும் என்பதையும் கற்றோம்.
சில ராசி வீடுகளில் கோள்கள் நடுநிலை (சமம்) வகிக்கும், அதாவது நற்பயன் அல்லது தீமை கொடுக்காமல், நடுநிலையில் தம் திறனை வெளிப்படுத்தும். சில ராசி வீடுகள் கோள்களுக்கு பகை வீடுகள். சில ராசி வீடுகள் கோள்களுக்கு நட்பு வீடுகள் என்பன போன்ற ஆருட அடிப்படைகளை முன்பு பார்த்தோம்.
இங்கே, கோள்கள் எந்தெந்த ராசி வீடுகளில் தாழ்வுநிலை (நீச்சம்) பெறும் என்பது குறித்து அறியலாம். "தாழ்வுநிலை" என்ற சொல்லில் இருந்தே தெளிவாக புரிந்துகொள்ள வேண்டியது, ஆருட கோள்கள் அத்தகைய ராசி வீடுகளில் இருக்கும் பொழுது, தம் திறன்களை இழந்து இருக்கும்.
கோள்கள் எந்தெந்த வீடுகளில் தாழ்வு நிலை பெறும் என்பது குறித்து கணக்கிடுவதற்கான இலக்கணம், கோள்கள் எந்த வீட்டில் உயர்வான நிலையை பெற்றதோ, அந்த வீட்டிற்கு 7ம் வீட்டில் தாழ்வு நிலை பெறும் என்பதே!
இதில் கவனிக்க வேண்டியது, மிதுனம் - சிம்மம் - தனுசு - கும்பம் ஆகிய ராசி வீடுகள் எந்த கோள்களுக்கும் தாழ்வு நிலையை தராது.
எளிதாக அறிந்து புரிந்து கொள்வதற்கு, கோள்கள் எந்தெந்த வீடுகளில் தாழ்வு நிலை பெறும் என்பதை ஒரு பட்டியலாக பார்க்கலாம்:
ஞாயிறு - துலாம்
திங்கள் - விருச்சிகம்
செவ்வாய் - கடகம்
அறிவன் (புத) - மீனம்
வியாழன் - மகரம்
வெள்ளி - கன்னி
காரி (சனி) - மேஷம்
ராகு - கேது - ரிஷபம்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில், ஒரு ஆருடக்கோள், ஒரே ஒரு ராசி வீட்டில் மட்டுமே தாழ்வு நிலையை அடைகிறது.