மனிதனாய் பிறந்த பலருக்கும் "ஓவர் நைட்ல ஒபாவா" ஆகிவிட வேண்டும் என்ற ஆசை. இந்த ஆசை இருப்பவர்கள் மட்டும் தான் முயற்சிகள் பலவற்றை செய்துகொண்டே இருக்கிறார்கள்.
முயற்சிகள் பல செய்தாலும் சிலர் வெற்றிகளை உடனடியாக அடைவதும், சிலர் ஆண்டுகள் பல கடந்து அடைவதும், பலர் அடுத்த தலைமுறைக்கு தமது ஊக்கங்களை, கனவுகளை விட்டுச்செல்வதும் நடைபெறுகிறது.
இது எதனால்? சோதிடம் இது குறித்து என்ன சொல்கிறது?.
அவரவர் முற்பிறவி மற்றும் இப்போது எடுத்துள்ள பிறவியில் அமையப்பெற்ற சாதக யோகப்படிதான் இந்த தொழில் யோகங்கள் அமைகிறதா என்பதை பார்க்கலாம்.
என்னதான் தாமாக தொழில் அமைத்து, வருவாய் ஈட்டுவதற்கு யோகம் இருந்தாலும், சரியான தசாபுக்திகள் அந்த நேரத்தில் அமையாவிட்டால் தொழில் செய்தும் பயன் இருக்காது.
ஒரு தொழில் துவங்க வேண்டுமாயின் அதற்கான தசை மற்றும் புக்தி, சாதகத்தில் தொழில் துவங்குவதற்கு ஏற்றதாக தொழில் துவங்கும் நேரத்தில் இருக்க வேண்டும்.
7 1/2 காரி என்கிற சனி, நீங்கு காரி என்கிற அஷ்டம சனி நேரங்களில் புதிய முதலீடுகளை மற்றும் தொழில் முயற்சிகளை செய்ய கூடாது.
பொதுவாக லக்னத்திற்கு 10-ம் இடம் எந்த சூழ்நிலையில் உள்ளது என்பதை கணிக்க வேண்டும். இது தான் தொழிலுக்குரிய பலனை தெரிந்து கொள்ளும் இடமாகும்.
லக்னத்திற்கு உரியவர் வலுப்பெறவில்லை என்றால் துவங்கிய தொழிலில் அலைச்சலும் இடர்பாடுகளும் இருந்து கொண்டே இருக்கும்.
சாதகத்தில் 2, 9, 11 ம் இடங்களுக்குறியவர்கள் யாரேனும் ஒருவர் வலுப்பெற்றால் போதும், தொழிலில் வருவாய் பல்கி பெருகும்.
சாதகத்தில் 6-ம் இடத்திற்கு உரியவர் பலம் இழந்து 10-ம் இடத்திற்கு உரியவர் ஆட்சி அல்லது உச்சம் பெற்று வலுப்பெற்று அமர்ந்தால் சாதகர் எந்த தொழிலை செய்தாலும் வெற்றி பெறுவார்.
10-ம் இடத்திற்கு உரியவர் 1, 4, 7, 10 ஆம் இடங்களில் ஏதாவது ஒன்றில் நல்ல கோள்களின் சேர்கை பெற்று இருந்தால் நற்பலன் ஏற்படும்.
தொழில் இடத்தில், அதாவது 10 -ம் இடத்தில் 12-ம் இடத்திற்கு உரியவர் இருந்தாலும், வியாழன் அல்லது கேது கெட்டு இருந்தாலும், தொழிலை முறையாக நடத்த இயலாது. அப்படி அமைந்திருந்தால், தேவை ஏதும் இல்லாமல் ஊர் விட்டு ஊர் செல்ல வேண்டி வரும். இதனால் இழப்பு மட்டும் தான் வந்து சேரும். தொழில் சிறப்பாக அமையாது.
தொழில் இடமான 10 -ல் ஒரு கோளாவது இருந்தால்தான் நல்லது என்று சோதிட கணிப்புகள் சொல்கிறது.
அப்படி 10 -ல் இல்லா விட்டாலும் 4 -ம் வீட்டில் இருந்தால் அவை கண்டிப்பாக 10 -ம் வீட்டை பார்க்கும். இந்த மாதிரி இருந்தாலும் தொழிலுக்கு மற்றும் வேலை வாய்ப்பிற்கு நல்லதுதான்.
எந்த லக்கினக்காரர்களுக்கும் தீய கோள்கள் 10 -ல் அல்லது 12 ம் வீட்டிற்கு உரியவருடன் அமர்வது அடிக்கடி தொழில் மாற்றத்தையும் இடம் மாற்றத்தையும் அலைச்சல்களையும், நொடிப்பையும் தரும்.
10-ம் வீட்டிற்கு உரியவர் பலம் குன்றி 6-ம் வீட்டிற்கு உரியவருடன் செவ்வாயும் வலுப்பெற்று அமர்ந்தால் அதன் தசை நடைபெறும் நேரங்களில் நல்ல வேலை வாய்ப்பு அமையும்.
6-ம் வீட்டிற்கு உரியவரும், செவ்வாயும், 10-ம் வீட்டிற்கு உரியவரும் மற்றும் காரி என்கிற சனி ஆகிய கோள்கள் வலுவிழந்தால் தொழில் மற்றும் வேலை வாய்ப்பு என இரண்டும் சரிவர அமையாது.
தொழில் இடமான 10 -ம் வீட்டிற்கு உரியவர் அல்லது காரி என்கிற சனி நீசம் பெற்றால் தாமாக தொழில் துவங்கவே கூடாது.
ஒருவரின் வாழ்கை அமைப்பு பற்றி சோதிட ரீதியாக கணிக்கும் போது பத்தாம் வீடு, பத்தாம் வீட்டிற்கு உரியவர், 10ம் வீட்டில் இருக்கும் கோள்கள், 10ம் வீட்டின் வீட்டிற்கு உரியவரோடு சேர்ந்த கோள்கள், பத்தாம் வீட்டிற்கு உரியவரை பார்க்கும் கோள்கள், 10 ம் வீட்டின் வீட்டிற்கு உரியவர் நவாம்சத்தில் இருக்கும் இடங்கள் என பலவற்றை கொண்டு முடிவெடுக்க வேண்டும்.
ஞாயிறு லக்னத்திற்கு பத்தில் இருந்தால் பத்தாம் வீட்டில் ஞாயிறு பலமாக இருந்தால் பல சாதனை படைக்கும் அமைப்பு , பெருமளவு வருவாய் ஈட்டும் யோகம் அமையப்பெறும்.
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பெருமை மிகு பதவி பெறும் யோகம், வங்கி துறையில் வேலை, வருமான வரி துறையில் வேலை, தந்தை மூலம் தொழில், நீதித்துறைகளில் வேலை, என இவற்றில் உயர் பதவிகளை பெறும் யோகம் அமையும். நல்ல மேலான்மை திறனும் தாமாக சாதகருக்கு அமையப்பெறும்.
மூளை சிறப்பாக வேலை செய்யும். அதனால் பெரும் வருவாய் கொண்ட கணிணி துறையில் கூட எளிதாக வேலை தாமாக தேடி வரும்.
ஞாயிருடன் ராகு, கேது, காரி என்கிற சனி கோள்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு ஏற்படுவது கீழ் பணிபுரியும் பணியாளர்களால் சிக்கல், மறைமுக எதிர்ப்புகள், தேவையற்ற தடை, நேர இழப்பு, இன்னல்கள், சட்ட இடர்பாடுகள் மற்றம் தேவையற்ற எதிர்பாரா சிக்கல்கள் போன்றவைகளை எதிர்கொள்ள நேரிடும்.
திங்கள் லக்னத்திற்கு பத்தில் இருக்குமேயானால்
1 நீர் சார்ந்த, கடல் சார்ந்த துறைகளில் வருமானம் பெறும் நிலை,
2. உணவகங்கள் தொடர்பான தொழில் ,
3. பால் பண்ணை தொழில்,
4. ஏற்றுமதி இறக்குமதி தொழில்,
5. பட்டு ஆடைகள்
6. முத்து , அழகு அணிகலன்கள் ,
7. உப்பு சார்ந்த தொழில்கள்,
8. மலை சார்ந்த தொழில்கள்
9. பால் சாக்லேட் சார்ந்த தொழில்கள்,
10. அடிக்கடி பயணம் செய்யக்௯டிய தொழில்கள்
ஆகியவற்றின் மூலம் நிறைய வருவாய் ஈட்டக்கூடிய வகையில் யோகம் அமையும்.
திங்கள் கெட்டுப்போய் இருந்தால் தேவையற்ற மனகுழப்பம், மனதில் அச்சம், மன அழுத்தம், எரிச்சல், தவறான சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள், சரியான முடிவு எடுக்க குழப்பம், எடுத்த செயல்களில் தோல்வி, செய்யும் தொழிலில் இடையூறு போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ளும் யோக நிலை உருவாகும். இருப்பினும் திங்கள் பத்தாமிடத்தில் இருந்தால் தாய்வழிச் சொத்துக்கள் கிடைக்கலாம்.
செவ்வாய் லக்னத்திற்கு 10 ல் பலம் பெற்று இருந்தால் செவ்வாய் வீரத்திற்கு உரியோன், நிலத்திற்க்கு உரியோன் கோபத்திற்கு உரியோன்.
செவ்வாய் 10ல் பலம் பெற்று இருந்தால்
1. காவல்துறை,
2. இராணுவம்,
3. தீயனைப்பு துறை ஆகியவற்றில் வேலை
4. நிலம் வீடு மனைகள் வாங்கி விற்கும் தொழில்,
5. பாதுகாப்பு துறை,
6. துனிச்சல் மிகு வேலை,
7. அரிமா, புலி, யானை போன்ற மிருகங்களை வைத்து செய்யும் வேலை,
8. தீப்பெட்டி, பட்டாச தொழில்,
போன்ற தொழில்களில் ஈடுபட்டு பெருமளவு வருவாய் பெறக்கூடிய யோகம் அமையும்.
செவ்வாய் பலமாக இருந்தால்தான் மேற்கூறியபடி இருக்கும். நல்ல மேலான்மை திறமையும் இருக்கும்.
அதுவே பலமிழந்து இருந்தால் மன துணிச்சல் அற்றவராக, தொடை நடுங்கியாக, பகைவர்களின் தொல்லைக்கு உட்படுபவராக, தொழிலில் இழப்பை சந்திப்பவர்களாக யோக நிலையை தந்துவிடும்.
லக்கினத்திற்கு 10 ல் அறிவன் என்கிற புதன் பலம் பெற்று அமைந்தால்
1. பள்ளி மற்றும் கல்லூரி ஆகியவற்றில் வேலை,
2. கவிஞர்களாக,
3. கணக்கர்களாக,
4. எழுத்தாளர்களாக,
5. பேச்சாளர்களாக,
6. அறிவுரை வழங்குபராக, ஆலோசனை கூறுபவர்களாக
7. கணித துறை
8. வங்கி, காப்பீடு துறை
9. ஊடகம் சார்ந்த துறைகளில்
ஈடுபட்டு நிறைய வருவாய் ஈட்டக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
அறிவன் என்கிற புதன் கோள் வலு குறைந்தால் அறிவின்மை, மறதி, சிந்தித்து செயல்பம் ஆற்றல் இல்லாமை ஆகிய தொல்லைகள் உருவாகும்.
அறிவன் பத்தாமிடத்தில் இருக்கும் போது நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து செய்யும் தொழில்களில் வருவாய் கிடைக்க வாய்ப்பு கூடுதல்.
வியாழன் லக்னத்துக்கு 10 ல் இருக்கக்கூடிய அமைப்பாக இருந்தால் வியாழன் நேர்மைக்கு உரியவன். நீதி நேர்மையாக வாழ்வை நடக்க வைப்பவர். ஒழுக்கமான வேலைகளை தருபவர். வலுவான வியாழன்
1. பல்கலை கழகத்தில் வேலை
2. மருத்துவராகவும்
3. வரி, காப்பீடு, வங்கி துறை
4. கல்விதுறை,
5. அரசியல் துறை
6. வளிபாட்டு துறை,
7. ஆராய்ச்சி துறை,
8. சட்டம் ஒழுங்க துறை,
ஆகிய துறைகளில் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்களில் ஈடுபட்டு கை நிறைய வருவாய் ஈட்டக்கூடிய யோகம் அமையும்.
அதே வேளையில் வியாழன் கெட்டுபோய் இருந்தால் பொய் பேசுதல், பித்தலாட்டம் செய்தல், கையூட்டு வாங்குவதில் ஆர்வம், பிறருக்கு தீங்கிளைத்தல், காட்டி கொடுத்தல், குழிபறித்தல், வீண் பழி சொல்லுதல். கெடுபிடி அகிய மகிழ்வற்ற பலன்கள் கிடைக்க துவங்கும்.
வெள்ளி லக்கினத்திற்கு 10ல் இருந்துவிட்டால்
1. இயல் இசை நாடகம்
2. ஆடம்பரம் அழகு அணிகலன்கள் தங்கம் வைரம்
3. துனி கடைகள், பட்டு விற்பனையகங்கள்,
4. மாட மாளிகைகள்
5. வாசனை துறைகள்
6. குதிரை பந்தயம்
7. மருந்து விற்பனை
என ஈடுபட்டு கை நிறைய பணம் ஈட்டும் யோகம் அமையும்.
அதே வேளையில் வெள்ளி வலுவற்று இருந்தால் பாலியல் தொழில், அடிமை தொழில், தீய பழக்கங்கள், பெண்பித்து பிடித்த நிலை என தீய யோகங்கள் கிடைக்கம் அல்லது சிலருக்கு பணம் இருந்தும் நல்ல மகிழ்வான வாழ்வு இல்லாமல் இருக்கக்கூடிய யோகத்தை தரும்.
லக்னத்துக்கு 10 ல் காரி என்கிற சனி இருந்துவிட்டால் அதவும் வலுப்பெற்று இருந்துவிட்டால்
1. உழவர் அல்லது உழவு தொடர்பான வேலை,
2. மருத்துவ துறை
3. காப்பீடு,
4. இரும்பு ஈயம், எண்ணெய் விற்பனை
5. அரிசி ,பருப்பு, புண்ணாக்கு மண்டிகள்.
6. தொழிற்சாலை அமைத்தல்,
7. பண்ணை தொழில் அமைத்தல்,
போன்றவற்றில் ஈடுபட்டு கை நிறைய பணம் ஈட்டக்கூடிய நிலையை உருவாக்கும்.
இதுவே பலமற்ற காரியாக இருந்தால் அடிமை வேலை, திருட்டு வேலை, மாட்டு தொழுவத்தில் சாணி அள்ளும் வேலை, தோட்ட கூலி வேலை, மரம் வெட்டும் வேலை, கூட்டுறவு பண்ணை வேலை போன்ற கீழ்நிலை வேலைகளில் ஈடுபடும் நிலை உருவாகும்.
லக்னத்திற்கு பத்தில் ராகு இருந்துவிட்டால்
1. விண்வெளி பயணம்,
2. ஆராய்ச்சி,
3. வானொலி,
4. மருத்துவ பணி
5. வேதியலில் சிறந்த பணி
6. ஆண்மீகம் அல்லது சோதிரம் தொடர்பான பணி
என வாழ்வு அமையும்.
ராகு எந்த கட்டத்தில் உள்ளதோ அந்த கோள் சார்ந்த பணிகளை செய்ய வைக்கும். பலமற்ற ராகு ஐயம் கொண்ட அறிவையும், எதையும் ஏற்க இயலாத தன்மையையும் ஏற்படுத்தும். செய்யும் செயல்களில் சிக்கலான நிலையை, மனக்குழப்பத்தை ஏற்படுத்தும்.
10ல் கேது பலம் பெற்று இருக்குமானால்
1. ஆண்மீகம் தொடர்பான துறைகள்
2. வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி,
3. அறிவியல் சார்ந்த துறைகள்
4. மனம், அறிவு ஒருங்கினைக்கும் துறைகள்
5. கட்ட பஞ்சாயத்து செய்யும் அளவிற்கான ஆற்றல்
போன்றவற்றில் ஈடுபட்டு கைநிறைய பணம் ஈட்டக்கூடிய யோகம் கிடைக்கும்.